மின்னல் வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்திலும் அசையாத தண்ணீர் கிளாஸ்

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல்லாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கோட்டா மற்றும் நாக்தா இடையே நடத்தப்பட்ட சோதனையில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது. இது குறித்த வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரயில் அதிவேகத்தில் செல்லும்போதும், உள்ளே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் கிளாஸில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட கீழே சிந்தவில்லை. இது இந்த ரயிலின் அபாரமான தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நீண்ட தூர பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏசி ஸ்லீப்பர் ரயில், பயண நேரத்தை பெருமளவு குறைக்கும். தற்போது இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் 160 கிமீ வேகத்தில் செல்லும் நிலையில், இந்த புதிய ஸ்லீப்பர் மாடல் 180 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது. முதற்கட்டமாக முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், பயணிகளுக்கு சொகுசான மற்றும் வேகமான பயண அனுபவத்தை வழங்கும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.