கேஸ் சிலிண்டர் முன்பதிவில் புதிய அதிரடி கட்டுப்பாடு அமல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தில் புதிய கட்டுப்பாடுகளை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. இனி ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதி காரணமாக சிலிண்டர்களை அதிகளவில் குவித்து வைப்பதைத் தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் பல இடங்களில் இந்த 21 நாட்கள் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. சில மாநிலங்களில் இந்த கால அளவு 25 நாட்களாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போதுமான எரிவாயு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தேவையற்ற முன்பதிவுகளைத் தடுத்து, தகுதியுள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த தற்காலிக விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.