ஆட்டிசம் சிகிச்சையில் ஸ்டெம் செல் தெரபிக்கு உச்சநீதிமன்றம் கடும் தடை மீறினால் கடும் நடவடிக்கை

ஆட்டிசம் பாதிப்புக்கு ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்துவது முறையற்றது மற்றும் அறிவியல் ஆதாரமற்றது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு, போதிய தரவுகள் இன்றி இச்சிகிச்சையை வணிக ரீதியாக வழங்குவது மருத்துவ அலட்சியமாகும் என்று குறிப்பிட்டனர். மருத்துவ ஆய்வுகளுக்கு மட்டுமே இச்சிகிச்சை அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், சாதாரண மருத்துவ நடைமுறையாக இதனைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசு, எய்ம்ஸ் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்துடன் இணைந்து இது குறித்து தெளிவான விதிகளை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இச்சிகிச்சையை மேற்கொண்டு வரும் நோயாளிகளை நான்கு வாரங்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு முறையான தகவல் வழங்கப்படாமல் பெறப்படும் சம்மதம் செல்லாது என்றும், இது மருத்துவ அறநெறிகளுக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.