வானில் நேருக்கு நேர் மோதிய இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒரு பைலட் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் ஹேமண்டன் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோர விபத்தில் ஒரு பைலட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ஸ்ட்ரோம் ரகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு ஹெலிகாப்டர்களிலும் பைலட்டுகள் மட்டுமே இருந்துள்ளனர். விபத்தின் பயங்கரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த விபத்து குறித்து ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன. விமானப் பராமரிப்பு மற்றும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுத் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த துயரமான சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள செனட்டர் கோரி புக்கர், விசாரணை அதிகாரிகளுடன் தனது அலுவலகம் தொடர்பில் இருப்பதாகவும் விபத்துக்கான சரியான காரணம் விரைவில் கண்டறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.