ஆபரேஷன் சிந்துருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து மேலும் 288 எஸ்-400 ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (டிஏசி), ரஷ்யாவிடமிருந்து சுமார் 10,000 கோடி ரூபாய் செலவில் 288 எஸ்-400 ஏவுகணைகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 120 குறுகிய தூர ஏவுகணைகளும், 168 நீண்ட தூர ஏவுகணைகளும் அடங்கும். மே 2025-இல் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணை இருப்பை ஈடுகட்டவும், நாட்டின் வான் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தவும் இந்த விரைவான கொள்முதல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்துரின் போது எஸ்-400 அமைப்பின் தாக்குதலுக்கு அஞ்சி பாகிஸ்தான் தனது போர் விமானங்களை எல்லைப் பகுதியிலிருந்து மாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த ஏவுகணை அமைப்புகளுடன் சேர்த்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள ‘பான்ட்சீர்’ அமைப்புகளையும் வாங்க விமானப்படை திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3.6 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உபகரணங்களுக்கு டிஏசி அனுமதி வழங்கியுள்ளது, இதில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.