நாமக்கலில் சிலிண்டர் பெற கேஒய்சி கட்டாயம் பொதுமக்கள் கடும் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு கே.ஒய்.சி (KYC) அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். முறையான ஆதார் சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் பதிவு இல்லாதவர்களுக்கு சிலிண்டர் வழங்க முகவர்கள் மறுப்பு தெரிவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கேஸ் ஏஜென்சி அலுவலகங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தகுதியுள்ள பயனாளர்களுக்கு மானியம் கிடைப்பதை உறுதி செய்யவும், முறையற்ற எரிவாயு இணைப்புகளைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய நடைமுறையால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தினசரி வேலைகளை விட்டுவிட்டு கே.ஒய்.சி அப்டேட் செய்வதற்காக மக்கள் அலைக்கழிக்கப்படுவதால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.