புதுச்சேரியில் எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பதற்றம் நள்ளிரவில் பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்
March 12, 2026

சர்வதேச அரசியல் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் உத்தரவால் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், சுமார் 750 ஹோட்டல்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல உணவகங்கள் மூடப்பட்டு, மக்கள் உணவுத் தேவைகளுக்காக திண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
மறுபுறம், பெட்ரோல் டீசலுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக பரவிய தகவலால் வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வாகனங்கள் மட்டுமின்றி கேன்களிலும் பெட்ரோலை நிரப்ப மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசுத் துறை அதிகாரிகள் வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரித்த போதிலும், பொதுமக்களிடையே நிலவும் பீதி இன்னும் தணியவில்லை.