17 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது இன்று முதல் வேளச்சேரி பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடக்கம்

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் பாதை 5 கி.மீ நீட்டிக்கப்பட்டு இன்று முதல் பரங்கிமலை வரை இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பிறகு இதற்கான தற்காலிக சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே இச்சேவையைத் தொடங்கியுள்ளது. கடற்கரை மற்றும் பரங்கிமலை இடையே தினமும் 86 ரயில் சேவைகள் காலை 5 மணி முதல் இரவு 10.20 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பணிகள் காரணமாக ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு வாரத்திற்கு ரயில்கள் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தட சேவையால் புழுதிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வாகன நிறுத்துமிடம் மற்றும் நிலையப் பராமரிப்பு குறித்த கோரிக்கைகளை குடியிருப்பு நலச் சங்கத்தினர் ரயில்வே நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளனர். இந்த இணைப்பு சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.