வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான ரயில் சேவை தொடங்குவதில் திடீர் சிக்கல்

வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையிலான மின்சார ரயில் சேவை இன்று தொடங்குவதாக இருந்த நிலையில், தொழில்நுட்ப காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் கடந்த வாரம் இந்த தடத்தில் ஆய்வு மேற்கொண்டார். தண்டவாளம் மற்றும் சிக்னல் அமைப்புகளில் சில மாற்றங்களைச் செய்ய அவர் அறிவுறுத்தியுள்ளதால், திட்டமிட்டபடி இன்று ரயில்கள் இயக்கப்படவில்லை.
சுமார் 17 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இந்த 5 கி.மீ நீட்டிப்புப் பணி முடிவடைந்ததால் பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஏற்கனவே புறநகர் ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய வழித்தட சேவையும் தாமதமாவதால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாதுகாப்பு ஆணையரின் அறிக்கை கிடைத்தவுடன் ஓரிரு நாட்களில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.