வெறும் 600 ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை அதிகாரிக்கு சிறை தண்டனை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

வருமான வரி ரீஃபண்ட் தொகையை பெற்றுத்தர 600 ரூபாய் லஞ்சம் கேட்ட அரசு ஊழியருக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் சாசாராம் பகுதியில் 2011-ல் நடந்த இந்த சம்பவத்தில், சிபிஐ அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அந்த ஊழியரை கையும் களவுமாக பிடித்தனர். வெறும் 600 ரூபாய்க்காக ஒரு அரசு அதிகாரி தனது பதவியை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது கண்டறியப்பட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று நீதிபதி எச்சரித்தார். தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், அந்த ஊழியரை உடனடியாக சரணடையவும், மீதமுள்ள ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளது.