ரஷ்ய ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய ஈரான் மேற்கத்திய நாடுகளுக்கு சவால்

ஈரான் தனது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான மூன்று கண்காணிப்பு செயற்கைக்கோள்களை ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஜாபர்-2, பயா மற்றும் கோசர் 1.5 ஆகிய இந்த செயற்கைக்கோள்கள் ரஷ்யாவின் வோஸ்டோச்னி ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டன. இவை புவி கண்காணிப்பு மற்றும் நீர் மேலாண்மை பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இதில் ‘பயா’ செயற்கைக்கோள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய மிகவும் மேம்பட்ட இமேஜிங் திறனைக் கொண்டுள்ளது.
இந்த ஏவுதல் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதுகின்றன. இருப்பினும் தனது விண்வெளி ஆய்வுத் திட்டம் முற்றிலும் அமைதி வழியிலானது என்றும் அணு ஆயுத தயாரிப்பு நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரான் மொத்தம் 10 செயற்கைக்கோள்களை ஏவி தனது விண்வெளி வலிமையை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.