மீண்டும் ஊரடங்கா? சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஹோட்டல்கள் மூடல்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி, மீண்டும் ஒரு கொரோனா கால ஊரடங்கு சூழலை நினைவுபடுத்துகிறது. வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாட்டால் சென்னை, டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் உணவுகளின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளதோடு, ஆன்லைன் டெலிவரி பணிகளும் பாதியாக குறைந்து லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசு தரப்பு கூறினாலும், கள்ளச்சந்தையில் ஒரு சிலிண்டர் 3,000 ரூபாய் வரை விற்கப்படுவது மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதே இந்த நிலைக்கு காரணம் எனத் தெரிகிறது. சிலிண்டர் முன்பதிவுக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மீண்டும் பழைய விறகு அடுப்பு முறைக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.