பாகிஸ்தான் ஆட்டமே இலக்கு: சூரியகுமாரின் ‘துருப்புச் சீட்டு’ யார்?

நமீபியாவுக்கு எதிரான போட்டி வெறும் ஒரு முன்னோட்டம் மட்டுமே; இந்திய அணியின் உண்மையான கவனம் என்னவோ ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான அந்த மெகா மோதலின் மீதுதான் உள்ளது. கொழும்புவின் மந்தமான ஆடுகளத்தில் நிலவும் பேட்டிங் சவால்களை எதிர்கொள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய படை புதிய வியூகங்களை வகுத்து வருகிறது.
அதிரடி ஆட்டத்தை விட, விக்கெட்டை தக்கவைத்து நிதானமாக விளையாடுவதே தற்போதைய முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி வருண் சக்கரவர்த்தியையே பெரிதும் நம்பியுள்ளது. அழுத்தமான நேரங்களில் வலது கை பேட்டர்களை திணறடிப்பதில் வருண் ஒரு கில்லாடி என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
மறுபுறம், கேப்டன் சூரியகுமார் யாதவ் முதல் 10 பந்துகளில் நிதானத்தைக் கடைப்பிடித்து, பெரிய இன்னிங்ஸை ஆடத் திட்டமிட்டுள்ளார். பந்துவீச்சாளர்களின் துல்லியமான லைன் மற்றும் லென்த், பேட்டர்களின் பொறுமை ஆகியவையே பாகிஸ்தான் உடனான அந்தப் பரபரப்பான போரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும்.