தெற்கு லெபனானில் இஸ்ரேல் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக மனித உரிமைகள் அமைப்பு பகீர் புகார்

தெற்கு லெபனானின் யோமோர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் தடைசெய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்தியதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இந்த இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காற்றில் பட்டவுடன் 800 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும் இந்த வேதிப்பொருள் மனித எலும்புகளைக் கூட உருக்கும் தன்மை கொண்டது. எனினும் இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் லெபனானில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 400 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால் தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட் பகுதிகளில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் தலையீட்டை லெபனான் சுகாதார அமைச்சர் ராகன் நஸ்ரெடின் வலியுறுத்தியுள்ளார். குடியிருப்பு பகுதிகளில் இத்தகைய இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.