தமிழகத்தில் துணை முதல்வர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன்

தமிழகத்தில் துணை முதல்வர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன்

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றால் பா.ஜ.க-வுக்கு “துணை முதல்வர்” பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் அக்கட்சியின் மேலிடம் உறுதியாக உள்ளது. இதற்கான அதிகாரப் பகிர்வு குறித்து அ.தி.மு.க தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பதவியைக் கைப்பற்ற பா.ஜ.க-வுக்குள் இப்போதே கடும் போட்டி நிலவி வருகிறது.

தென் மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க தலைவரான நயினார் நாகேந்திரன், தனக்குள்ள அமைச்சரவை அனுபவத்தை முன்னிறுத்தி இந்தப் பதவிக்காகக் காய் நகர்த்தி வருகிறார். டெல்லி மேலிடம் மட்டுமின்றி, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் வரை தனது கோரிக்கையைக் கொண்டு சென்றுள்ள அவர், தென் மாவட்ட வாக்குகளை உறுதிப்படுத்த தனது பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரான வானதி சீனிவாசன், டெல்லி மேலிடத்துடனான தனது நெருக்கத்தைப் பயன்படுத்தி இந்தப் போட்டியில் முன்னிலையில் உள்ளார். பெண் பிரதிநிதித்துவம் மற்றும் கொங்கு மண்டல அரசியல் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, தனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இது தவிர, மாநிலத் தலைமைக்கு நெருக்கமான மேலும் சில முக்கியப் புள்ளிகளும் இந்த ரகசியப் போட்டியில் இருப்பதாகத் தெரிகிறது.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, துணை முதல்வர் பதவியை ஒரு கூட்டணிக் கட்சிக்கு விட்டுக் கொடுப்பது என்பது சவாலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. “முதலில் வெற்றி, பிறகுதான் பதவி” என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருக்க, தேர்தலுக்கு முன்பே அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய பா.ஜ.க தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ் மூலம் அழுத்தம் கொடுத்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *