தண்டனை காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறையில் வாடும் 167 இந்தியர்கள் இவர்களை மீட்க இந்தியா கடும் நடவடிக்கை

பாகிஸ்தான் சிறைகளில் தண்டனை காலம் முடிந்த பிறகும் அடைக்கப்பட்டுள்ள 167 இந்தியர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இந்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்திடம் பேசிய புதுடெல்லி, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தண்டனை காலம் முடிந்தவர்களை தாமதமின்றி நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதில் எல்லை தாண்டிய குற்றத்திற்காக பிடிபட்ட அப்பாவி மீனவர்களும் அடங்குவர்.
தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் சிறைகளில் 58 இந்திய குடிமக்களும் 199 மீனவர்களும் உள்ளனர். இதில் 167 பேர் ஏற்கனவே தண்டனை காலத்தை முடித்திருந்தாலும் நிர்வாக சிக்கல்களால் இன்னும் சிறையிலேயே உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்ட இந்தியா, எஞ்சியுள்ள 35 இந்தியர்களை அடையாளம் காண தூதரக அதிகாரிகளுக்கான அனுமதியையும் கோரியுள்ளது.