தங்கம் விலை உயர்வு மற்றும் பங்குச் சந்தை வரி குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம்

சர்வதேச சந்தையில் நிலவும் நிலையற்ற சூழல் மற்றும் பல்வேறு நாடுகளின் நாணயங்கள் மீதான நம்பிக்கை குறைவு காரணமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் தனிநபர் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகளவில் சேமிக்கத் தொடங்கியுள்ளன என்றார். இந்த அதீத தேவையே விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
பங்குச் சந்தை ஊக வணிகத்திற்கான வரி உயர்வு குறித்துப் பேசுகையில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய வணிகத்தில் பணத்தை இழப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். நடப்பு பட்ஜெட்டில் நுகர்வை விட முதலீட்டிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறையை 4.3 சதவீதமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்பனை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதோடு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிச் சலுகைகள் மூலம் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டே இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.