தங்கம் விலை அதிரடியாக உயருமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனின் முக்கிய எச்சரிக்கை

சர்வதேச சந்தையில் நிலவி வரும் நிலையற்ற சூழலால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இந்தச் சூழலில், பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை மாற்றம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.
அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் போர் குறித்த அறிவிப்புகளால் தங்கம் மற்றும் பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை இருப்பு வைத்து வருகின்றன. குறிப்பாக, போலாந்து போன்ற நாடுகள் சமீபத்தில் அதிக அளவில் தங்கத்தை வாங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தங்கம் விலை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் ஏறி இறங்கினாலும், போர் நிறுத்த அறிவிப்பு வெளியானால் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். போர் முடிவுக்கு வரும் பட்சத்தில் தங்கம் விலை அதிரடியாக உயரக்கூடும் என்பதால், விலை குறைவாக இருக்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி சிறுகச் சிறுக தங்கத்தை வாங்குவது முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக அமையும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.