டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தற்கொலை படை பயங்கரவாதி யாசிர் தார் கைது

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஒன்பதாவது முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது தாரை தேசிய புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது. ஸ்ரீநகரின் ஷோபியான் பகுதியைச் சேர்ந்த இவன், டெல்லியில் தற்கொலைத் தாக்குதல் நடத்த சபதம் ஏற்றிருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சதித்திட்டத்தில் இவனுக்கு நேரடித் தொடர்பு இருப்பதும், முக்கிய குற்றவாளிகளான உமர் நபி மற்றும் முஃப்தி இர்பான் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் யாசிர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத சதிவலை குறித்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி டிஜிட்டல் ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக மற்றுமொரு குற்றவாளியான நாசிர் பிலாலின் குரல் மாதிரியைச் சோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் பெரிய அளவிலான தாக்குதலுக்குத் திட்டமிட்ட அனைத்து நபர்களையும் பிடிக்க புலனாய்வு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.