டிஜிட்டல் கைது மிரட்டலில் சிக்கி ஒரு கோடி ரூபாயை இழந்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி

தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரியைச் சேர்ந்த 69 வயது ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஒருவர், நூதனமான டிஜிட்டல் கைது மோசடியில் சிக்கி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழந்துள்ளார். பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்பிருப்பதாகக் கூறி, மர்ம நபர்கள் அவரை ஒரு வாரமாக மிரட்டியுள்ளனர். இதில் அச்சமடைந்த நீதிபதி, மோசடியாளர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்குப் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார்.
சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்த ஒரு நீதிபதியே இத்தகைய சைபர் குற்றத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மூன்று நாட்களுக்குப் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மக்கள் இத்தகைய மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டாம் என்றும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.