கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் பிரம்மாண்ட போர் பயிற்சியால் வெடிக்கப்போகும் அடுத்த போர்க்களம்

மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், தற்போது கிழக்கு ஆசியாவிலும் போருக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சியான ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ திங்களன்று தொடங்கியது. மார்ச் 19 வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், தென்கொரியாவின் 18,000 வீரர்கள் மற்றும் ஏராளமான அமெரிக்கப் படையினர், நவீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களுடன் பங்கேற்றுள்ளனர். சாத்தியமான போர்ச் சூழலை எதிர்கொள்ள இரு நாடுகளின் ராணுவ ஒருங்கிணைப்பைச் சரிபார்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த பிரம்மாண்ட ராணுவ நடவடிக்கையை வடகொரியா தனது பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. தற்காப்பு என்ற பெயரில் வாஷிங்டனும் சியோலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாகப் பியாங்யாங் குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், வடகொரியா பதிலடி கொடுக்கும் விதமாக ஏவுகணைச் சோதனை அல்லது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.