ஏமன் விவகாரத்தில் அதிரடி திருப்பம் சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு ஐக்கிய அரபு அமீரகம் உறுதி

ஏமனின் முக்கல்லா துறைமுகம் மீதான சவுதி அரேபியாவின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டிலிருந்து தனது எஞ்சிய படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பாதுகாப்பில் தங்களுக்கு முழு ஈடுபாடு இருப்பதாகத் தெரிவித்துள்ள அமீரகம், பிரிவினைவாத அமைப்பான எஸ்.டி.சி-க்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக மறுத்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவுகளின் பணிகள் தன்னிச்சையாக முடிக்கப்படுவதாக அமீரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அதே சமயம், ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி எஸ்.டி.சி அமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமீரகத்துடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. முக்கல்லா துறைமுகத்திற்கு வந்த கப்பல்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டதாக சவுதி தரப்பு சந்தேகிக்கிறது. நீண்டகால கூட்டாளிகளாக இருந்த சவுதி மற்றும் அமீரகம் இடையே தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.