இன்று முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சி

நாடு முழுவதும் இன்று பிப்ரவரி 1 முதல் புகையிலை பொருட்களுக்கான கூடுதல் கலால் வரி அமலுக்கு வந்துள்ளதால் சிகரெட் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. புகையிலை மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டிற்கு ₹2.05 முதல் ₹8.50 வரை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் சிகரெட்டுகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
வரி அதிகரிப்பு மட்டுமின்றி, பான் மசாலா மற்றும் குட்கா தயாரிப்பாளர்கள் மீது அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி தயாரிப்பு இயந்திரங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு அதன் பதிவுகளைப் பாதுகாக்க வேண்டும். மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா மீது முறையே 82% மற்றும் 91% கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதால், வரும் நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் உற்பத்தி 6-8% வரை குறைய வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.