இந்தியாவிடம் மீண்டும் சரணடையுமா பாகிஸ்தான்? டி20 உலகக்கோப்பை போருக்கு முன் பரபரப்பு!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் வேளையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பலமுறை இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய கசப்பான நினைவுகளை பாகிஸ்தான் இம்முறை முறியடிக்குமா என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் அதிரடியான கருத்து ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் மூன்று முறை தோற்றிருந்தாலும், அந்தப் போட்டிகள் ஒருதலைப்பட்சமாக அமையவில்லை என்றும், இம்முறை இந்தியாவுக்குப் பாகிஸ்தான் சிம்ம சொப்பனமாக விளங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய அழுத்தங்களுக்கு மத்தியிலும், இது ஒரு ‘சாதாரண போட்டி’ என்று அவர் எளிதாகக் கடக்க முயன்றாலும், மைதானத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை பாகிஸ்தான் பேட்டர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ‘மகா யுத்தத்தில்’ இந்தியாவின் பலத்திற்கு முன்னால் பாகிஸ்தானின் தன்னம்பிக்கை எடுபடுமா அல்லது பழைய வரலாறு மீண்டும் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.