ஆன்லைன் கேம் விளையாடத் தடை விதித்ததால் மூன்று சகோதரிகள் தற்கொலை, பெற்றோர்களை அதிரவைத்த சோகம்

செய்தி பிரிவு : ஆன்லைன் விளையாட்டு மோகம் நமது குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் நிலைக்குத் தள்ளுகிறதா? காசியாபாத்தில் ஆன்லைன் கேம் விளையாடுவதைத் தந்தை கண்டித்ததால், மூன்று சிறுமிகள் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. 16, 14 மற்றும் 12 வயதுடைய இந்தச் சிறுமிகளின் விபரீத முடிவு, இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் மனநலம் எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
போலீஸ் விசாரணையில், அந்தச் சிறுமிகள் ‘கொரியன் லவர்’ என்ற ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. தற்கொலைக்கு முன் ‘அம்மா-அப்பா மன்னித்து விடுங்கள்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத செயலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காலத்திற்குப் பிறகு பள்ளிக்குச் செல்லாமல் முடங்கியிருந்த இந்தச் சிறுமிகள், மொபைல் போன் திரையிலேயே தங்கள் உலகத்தைத் தேடியுள்ளனர். இது ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் இணைய செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.