ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்! திமுக அரசை அதிரவைத்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கொலைகள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கவில்லை என்றும், எங்கும் எப்போதும் கொலைகளே நடப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதியோர் கொலை மற்றும் விவசாயி படுகொலை போன்ற சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய முதல்வர், சட்டம் ஒழுங்கு குறித்து வாய் திறக்காதது ஏன் என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். திமுக அரசு தனது கடைசி நாட்களில் இருக்கும் இந்தச் சூழலிலாவது மக்கள் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.