மேற்கு வங்கத்தில் மூன்று கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் கொல்கத்தாவில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவை பாஜக பிரதிநிதிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் தேர்தலை அதிகபட்சமாக மூன்று கட்டங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தேர்தல் தொடர்பான 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆணையத்திடம் அக்கட்சி சமர்ப்பித்தது.
மாநிலத்தில் தற்போதுள்ள பாதுகாப்பு சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ள பாஜக மத்திய பாதுகாப்புப் படைகளை மாநில காவல்துறை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது. பதற்றமான பகுதிகளைத் தவிர்த்து அமைதியான இடங்களில் மட்டுமே அணிவகுப்பு நடத்தப்படுவதாகவும் அவர்கள் புகார் கூறினர். வன்முறையற்ற மற்றும் சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.