புத்தாண்டு நாளில் வங்கதேச தூதரகம் சென்ற ராஜ்நாத் சிங் பின்னணி என்ன

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புத்தாண்டு தினத்தன்று புதுடெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலேதா ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த காலேதா ஜியாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், இரங்கல் குறிப்பேட்டிலும் அவர் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர், வங்கதேச மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 30 அன்று காலேதா ஜியா காலமானார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்பட்டது. புதன்கிழமை அன்று தலைநகர் டாக்காவில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அண்டை நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சரின் இந்த பயணம் அமைந்துள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிற்கான வங்கதேச தூதர் ரியாஸ் ஹமிதுல்லா இந்த வருகைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.