தந்தையின் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவனின் நெகிழ்ச்சி சம்பவம்
March 9, 2026

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் சாய்நிஷாந்த், தந்தை அந்தோணிராஜ் உயிரிழந்த துயரத்திலும் தனது பிளஸ் 2 வேதியியல் தேர்வை எழுதச் சென்றார். இன்று அதிகாலை தந்தை மறைந்த செய்தியால் நிலைகுலைந்த போதிலும், கல்வியே எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர் இந்த முடிவை எடுத்தார். தேர்வுக்குச் செல்லும் முன் தந்தையின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற மாணவனின் செயல் அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.
பள்ளிக்கு வந்த சாய்நிஷாந்தை அவரது நண்பர்கள் கட்டிப்பிடித்து அழுது தங்களது ஆறுதலைத் தெரிவித்தனர். தந்தையை இழந்த பெரும் சோகத்திலும் மன உறுதியுடன் தேர்வு எழுத வந்த மாணவனின் கடமை உணர்வை ஆசிரியர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். இக்கட்டான சூழலில் அந்த மாணவர் காட்டிய இந்த மனதிடம், கல்வி மீதான அவரது பற்றையும் லட்சியத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.