இபிஎஸ் பிரச்சாரத்தில் கூட்டத்தை கூட்ட தங்க நாணய டோக்கன் விநியோகம் பெரும் பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களை ஈர்க்க ஒரு வினோத முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பவானி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குக் குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான டோக்கன்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. அரசியல் கூட்டத்திற்கு அதிகப்படியான மக்களைத் திரட்டும் நோக்கில் செய்யப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் உரை முடிந்தவுடன் குலுக்கல் முறையில் 10 வெற்றியாளர்களுக்கு அரை கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட 10 டோக்கன்களுக்குரிய நபர்களும் கூட்டம் முடிவதற்கு முன்பே அங்கிருந்து சென்றது தெரியவந்தது. அந்த நபர்களைத் தொடர்பு கொண்டு தங்க நாணயங்கள் வழங்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் ஈரோடு பகுதியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.