சைக்கிள் பின்னாடி தொங்கி ஸ்கேட்டிங் செய்த சல்மான்! மாஸ்டர் ராஜு வெளியிட்ட ‘பாய்ஜான்’ ரகசியங்கள்!

இன்று உலகமே வியந்து பார்க்கும் சூப்பர் ஸ்டாராக சல்மான் கான் இருக்கலாம், ஆனால் ஒரு காலத்தில் அவர் பாந்த்ரா தெருக்களில் சாதாரண இளைஞனாக சுற்றித் திரிந்தவர். அந்த காலக்கட்டத்தின் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான ‘மாஸ்டர் ராஜு’ (ராஜு ஸ்ரேஸ்தா), சல்மான் கான் குறித்து சில நெகிழ்ச்சியான மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சைக்கிள் பின்னாடி ஸ்கேட்டிங்
“நான் பாந்த்ராவில் சைக்கிள் ஓட்டும்போதெல்லாம், சல்மான் என் சைக்கிளின் பின் பகுதியை பிடித்துக்கொண்டு ஸ்கேட்டிங் பயிற்சி செய்வார். அப்போது மக்கள் என்னைப் பார்ப்பதற்காகவே கூடுவார்கள், ஆனால் என் அருகில் நிற்கும் சல்மானை யாருமே அடையாளம் காண மாட்டார்கள்,” என்று ராஜு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். இருவரும் ஒன்றாக குளிப்பதும், மணிக்கணக்கில் அரட்டை அடிப்பதும் வழக்கமாம்.
மனக்கட்டுப்பாடு இல்லாத குணம்?
சல்மான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதற்கான காரணத்தையும் ராஜு விளக்கியுள்ளார். “சல்மான் மூளையை விட இதயத்தால் யோசிப்பவர். தன் உணர்ச்சிகளை அவரால் கட்டுப்படுத்த முடியாது. ஒருவரின் வீட்டின் முன் நின்று சத்தமிடுவது அல்லது முன்னாள் காதலி வீட்டின் முன் ரகளை செய்வது என அவர் சில நேரங்களில் எல்லை மீறுவார். அவர் மிகவும் நல்ல மனிதர், ஆனால் கோபம் மற்றும் உணர்ச்சி வேகத்தில் நிதானத்தை இழந்துவிடுகிறார்,” என ராஜு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சல்மான் தன் பழைய நட்பை மறக்கவில்லை. ராஜுவின் இக்கட்டான காலத்தில் ‘பாகி’ மற்றும் ‘சல் மேரே பாய்’ போன்ற படங்களில் அவருக்கு வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளார். சல்மான் கான் தற்போது தனது அடுத்த பிரம்மாண்ட படமான ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ (Battle of Galwan) படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.