காந்தி பற்றி கட்டுரை எழுதினால் தண்டனை குறையுமா? மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

சிறையில் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால் ஒரு குற்றவாளியின் தண்டனை குறைக்கப்பட வேண்டுமா? 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தண்டனையை 12 ஆண்டுகளாக குறைத்து மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறையில் மகாத்மா காந்தியின் கொள்கைகள் குறித்து கட்டுரை எழுதியது மற்றும் பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றதை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
தற்போது அந்த இளைஞர் 9 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நீதிமன்றத்தின் புதிய உத்தரவுப்படி, இன்னும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தால் அவர் விடுதலையாகிவிடுவார். கீழ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை சரியானது என்றாலும், குற்றவாளியின் குணநலன்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் காந்திய தத்துவங்களில் அவருக்குள்ள ஆர்வத்தை நீதிபதிகள் முக்கியமாகக் கருதியுள்ளனர். கல்வி மற்றும் மனமாற்றம் இத்தகைய கொடூரமான குற்றத்திற்கான தண்டனையைக் குறைக்க முடியுமா என்ற கேள்வி இப்போது பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.