உத்தர பிரதேச அரசியலில் அதிரடி மாற்றம் மீண்டும் பாஜக நடத்திய இப்தார் விருந்து

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, 2014-ஆம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக பாஜக சார்பில் இப்தார் நோன்பு விருந்து மீரட்டில் நடத்தப்பட்டது. சிறுபான்மை மோர்ச்சா தலைவர் குன்வர் பாசித் அலி மற்றும் அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, லக்னோவுக்கு பதிலாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மேற்கு உ.பி. பகுதியில் நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் இடங்கள் குறைந்த நிலையில், சிறுபான்மையினருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அலிகார் மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களிலும் இது போன்ற இப்தார் விருந்துகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நகர்வு முஸ்லிம் வாக்காளர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு முக்கிய தேர்தல் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.