மோடி அமைச்சரவையின் மெகா திட்டம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவை இணைக்கும் புதிய 6 வழிச்சாலை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மகாராஷ்டிராவில் 19,142 கோடி ரூபாய் மதிப்பிலான 374 கிமீ நீளமுள்ள நாசிக்-சோலாப்பூர் 6 வழி நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சூரத்-சென்னை அதிவேக வழித்தடத்தின் ஒரு பகுதியாக அமையும் இத்திட்டம் நாசிக், அஹில்யாநகர் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களை இணைக்கும். இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவுள்ள இந்த புதிய சாலை நாசிக் மற்றும் சோலாப்பூர் இடையேயான தூரத்தை 14 சதவீதம் குறைத்து பயண நேரத்தை மிச்சப்படுத்தும்.
இந்த பசுமை வழித்தடத் திட்டம் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே மற்றும் சம்ருத்தி மஹாமார்க்குடன் இணைக்கப்படுவதால் சூரத் மற்றும் சென்னை இடையிலான பயண நேரம் 45 சதவீதம் வரை குறையும். இதன் மூலம் சுமார் 560 லட்சம் வேலைநாட்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஒடிசாவில் கோராபுட் முதல் மோகனா வரையிலான நெடுஞ்சாலையை மேம்படுத்த 1526 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.