முன்னாள் மனைவிடம் 50 கோடி கேட்ட குமார் சானு! பாடகர் மீது ரீட்டா பட்டாச்சார்யா மீண்டும் குற்றச்சாட்டு

பிரபல பாடகர் குமார் சானு மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீட்டா பட்டாச்சார்யா இடையிலான குடும்பத் தகராறு தற்போது நீதிமன்றத்தை எட்டியுள்ளது. ரீட்டா முன்வைத்த புகார்களுக்குப் பதிலடியாக, குமார் சானு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். முதலில் 30 லட்சம் ரூபாய் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது 50 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சானு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ரீட்டா பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். தனது மூன்று குழந்தைகளின் தாய்க்கு எதிராக சானு இவ்வளவு பெரிய தொகையைக் கேட்பது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தான் கர்ப்பமாக இருந்தபோது குமார் சானுவின் குடும்பத்தினர் தன்னை மிகக் கொடுமையாக நடத்தியதாகவும், உணவு மற்றும் மருத்துவ வசதி கூட அளிக்கவில்லை என்றும் ரீட்டா குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சானுவைச் சந்திக்கும்போது, குழந்தைகளுக்காகவாவது கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்போவதாக ரீட்டா தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.