மாலில் சிகரெட் பிடித்தால் அசிங்கம் ஆகிவிடுவீர்கள் இந்த புதிய கண்ணாடியால் ஜாக்கிரதை

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள இரண்டு பிரபல ஷாப்பிங் மால்களில் ஆண்களுக்கான கழிவறையில் வியக்கத்தக்க தொழில்நுட்பம் கொண்ட கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. சாதாரணமாக மறைவாக இருக்கும் இந்தக் கண்ணாடிகள், உள்ளே யாராவது சிகரெட் பிடித்தால் சில நொடிகளிலேயே வெளிப்படையாகத் தெரியும் வகையில் மாறிவிடும். இதனால் உள்ளே இருப்பவர் புகைபிடிப்பதை வெளியில் இருப்பவர்கள் தெளிவாகக் காண முடியும். புகைபிடித்தால் உங்கள் மானம் கப்பலேறிவிடும் என அங்கேயே எச்சரிக்கைப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பலரும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பாராட்டி வருகின்றனர். பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், இது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று மற்றொரு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். எப்படியாயினும், சீன மால்களின் இந்த நூதன முயற்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.