மனிதர்களை கடித்தால் நாய்களுக்கு இனி ஆயுள் தண்டனை அரசாங்கத்தின் அதிரடி உத்தரவு

பிரயாக்ராஜில் தெருநாய்களின் தொல்லை மற்றும் அவை மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு அதிரடியான புதிய விதியை அமல்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு நாய் முதல்முறை யாரையாவது கடித்தால் அது பத்து நாட்கள் கண்காணிக்கப்பட்டு உடலில் மைக்ரோசிப் பொருத்தப்படும். ஆனால் அந்த நாய் மீண்டும் இரண்டாவது முறையாக யாரையாவது கடித்தால் அதற்கு ‘ஆயுள் தண்டனை’ விதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள காப்பகத்தில் அடைத்து வைக்கப்படும்.
தற்போது அந்த நகரத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டியுள்ளதுடன் மாதந்தோறும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கடி சம்பவங்கள் பதிவாகின்றன. இந்த அபாயகரமான சூழலை கட்டுப்படுத்த அரசு சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவில் நவீன மையங்களை அமைத்து கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டு வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கான உரிமம் மற்றும் பதிவை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில் பொதுமக்களின் ஒத்துழைப்பை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.