தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
March 9, 2026

ஒற்றைத் திரையரங்குகளில் படம் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதற்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வணிகக் கட்டிட அனுமதி பெற வேண்டுமெனில் போதுமான வாகன நிறுத்த வசதி இருப்பது கட்டாயம் என்று நகராட்சி சட்டங்கள் கூறுகின்றன. எனவே, டிக்கெட் வாங்கிய பிறகு தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி செல்லாது என்று நீதிபதி என்.வி. சரவண் குமார் தெரிவித்துள்ளார்.
பார்வையாளர்களிடம் இக்கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கும் முந்தைய அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் இந்த விதியை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டகால புகாருக்குப் பின் கிடைத்துள்ள இந்த முக்கிய தீர்ப்பு சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.