திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி மற்றும் சிபிஎம் அதிருப்தி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக மற்றும் சிபிஎம் இடையிலான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவடைந்தது. திமுக ஒதுக்கிய தொகுதிகளின் எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் இடங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்பதில் சிபிஎம் பிடிவாதமாக இருப்பதால் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. கடந்த முறையை விட கூடுதல் இடங்களில் போட்டியிட விரும்புவதாகவும், இது குறித்து கட்சி தலைமையுடன் ஆலோசித்துவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரப்போவதாகவும் பெ.சண்முகம் கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.