சென்னையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கிய ஆட்டோக்கள் மற்றும் கடும் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சீர்செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு சார்பில் அண்ணா சாலை தாராப்பூர் டவர்ஸ் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்துகொண்டு, எரிபொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் சென்னையில் சுமார் 25 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை என்று சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். ஏழை மக்களின் ஆம்புலன்ஸாக கருதப்படும் ஆட்டோக்கள் முடங்கியுள்ள நிலையில், தனியார் டாக்சி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும், பொதுமக்களின் நலன் கருதி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.