சீனாவை பின்னுக்கு தள்ளி அரிசி உற்பத்தியில் உலகளவில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை

அரிசி உற்பத்தியில் நீண்டகாலமாக நீடித்து வந்த சீனாவின் ஆதிக்கத்தை முறியடித்து இந்தியா தற்போது உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்க வேளாண் துறையின் (USDA) சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியா 152 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை உற்பத்தி செய்துள்ளது, அதே சமயம் சீனாவின் உற்பத்தி 146 மில்லியன் மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 28 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய அரிசி தற்போது சுமார் 172 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கிறது. 2024-25 நிதியாண்டில் அரிசி ஏற்றுமதி மூலம் இந்தியா சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. சுமார் 60,000 வகை அரிசிகளைக் கொண்டுள்ள இந்தியா, இந்த அசுர வளர்ச்சியின் மூலம் சர்வதேச சந்தையில் தனது பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.