உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய இந்திய ஏஐ தொழில்நுட்பம் சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு ஸ்டார்ட்அப்

பெங்களூருவைச் சேர்ந்த ‘சர்வம் ஏஐ’ நிறுவனம் உருவாக்கியுள்ள ‘சர்வம் விஷன்’ மற்றும் ‘புல்புல்’ ஆகிய ஏஐ கருவிகள் உலக அரங்கில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஆவணங்களைப் படிக்கும் ஓசிஆர் தொழில்நுட்பத்தில் சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி போன்ற முன்னணி நிறுவனங்களை விட சர்வம் விஷன் 93.28 சதவீத துல்லியத்துடன் சாதனை படைத்துள்ளது. கடினமான வரைபடங்கள் மற்றும் கணித சூத்திரங்களைக் கண்டறிவதில் இக்கருவி சிறந்து விளங்குகிறது.
அதேபோல் புல்புல் வி3 எனும் வாய்ஸ் ஏஐ மாடல் 11 இந்திய மொழிகளில் 35-க்கும் மேற்பட்ட குரல்களில் உரையை ஒலியாக மாற்றுகிறது. ஏற்கனவே இந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக விமர்சிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது சர்வதேச தரத்திற்கு இணையான செயல்திறனை நிரூபித்துள்ளது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளர்ச்சி உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.