ஈரான் போரால் எகிறும் விலைவாசி மற்றும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

மேற்கு ஆசியப் போரின் விளைவாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதைத் தடுக்க மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த உயர்நிலைக் கூட்டத்தில், போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக அந்தந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சரவைச் செயலாளர் சோமநாதனுடன் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு இந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.