காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறாவிட்டால் பாட்டிலுக்கு 10 ரூபாய் அபராதம்

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகச் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்ரவர்த்தி அமர்வு, மே 31-ஆம் தேதிக்குள் இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இறுதி அவகாசம் அளித்தது. தவறும்பட்சத்தில், ஜூன் 1 முதல் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் சுற்றுச்சூழல் இழப்பீடாக வசூலிக்கப்படும் என எச்சரித்தனர். ஊழியர்களின் பிரச்சனையை அரசே தீர்க்க வேண்டும் எனக் கூறி வழக்கு ஜூன் 5-க்கு ஒத்திவைக்கப்பட்டது.