பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் 80 சதவீதத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சிப்ரி அறிக்கை அதிரடி தகவல்

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) புதிய அறிக்கையின்படி, பாகிஸ்தானின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2021-25 காலப்பகுதியில் சீனாவின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் 61 சதவீதம் பாகிஸ்தானுக்கு மட்டுமே சென்றுள்ளது. குறிப்பாக ஜே.எஃப்-17 தண்டர் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன தளவாடங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தற்போது சீனாவின் பிடியில் முழுமையாக சிக்கியுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதியாளராகத் தொடர்கிறது. இருப்பினும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பால் இறக்குமதி அளவு 4 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியா தற்போது ரஷ்யாவைத் தவிர்த்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து அதிக தளவாடங்களை வாங்குகிறது. உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், உக்ரைன் போரினால் ரஷ்யாவின் ஏற்றுமதி சரிந்துள்ளதாகவும், ஐரோப்பா தற்போது உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி மண்டலமாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.