ஸ்டாலினை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் விசில் சின்னத்திற்கே வாக்களிப்பார், விஜய்யின் விமர்சனத்திற்கு திமுக பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். முதல்வர் ஸ்டாலினைச் சுட்டிக்காட்டி பேசிய அவர், முதல்வர் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரை எழுப்பி எந்தச் சின்னத்திற்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால், அவர் ‘விசில்’ சின்னத்தையே சொல்வார் என்றார். ஏனெனில் தூக்கத்தில் இருந்து எழுபவர்கள் உடனடியாகப் பொய் சொல்ல மாட்டார்கள் என்றும், தற்போது தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் விசில் சத்தம் ஒலிப்பதாகவும் விஜய் குறிப்பிட்டார்.
விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கிண்டலாகப் பதிலடி கொடுத்துள்ளார். விஜய் நிம்மதியாகத் தூங்கும்போது, முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் சென்று தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு சேகரிப்பதாகக் கனவு காண்கிறார் என்று அவர் விமர்சித்தார். மேலும், விஜய்யால்தான் தமிழகம் ஜிடிபி மற்றும் கல்வியில் முதலிடத்தில் உள்ளது என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறாரா என்றும் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அரசியல் மோதல் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.