டெல்லி ஐந்து நட்சத்திர உணவகத்தில் உணவில் விஷம் கலப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் அனுமதி

டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உணவு அருந்திய பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 27 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உடலில் விஷம் கலந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆடம்பர ஹோட்டல்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 286-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹோட்டலில் இருந்து 16 வகையான உணவு மற்றும் பான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தற்செயலான கவனக்குறைவா அல்லது யாரேனும் திட்டமிட்டு செய்த சதியா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.