715 கோடி சொத்து இருப்பதாக மேட்ரிமோனியில் பொய் கூறி பெண் இன்ஜினியரிடம் கோடிக்கணக்கில் மோசடி

பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நவ்யா ஸ்ரீ, மேட்ரிமோனி தளம் மூலம் அறிமுகமான விஜய் ராஜ் கவுடா என்பவரிடம் 1.53 கோடி ரூபாயை இழந்துள்ளார். தன்னை 715 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதி என்றும், விஆர்ஜி எண்டர்பிரைசஸ் உரிமையாளர் என்றும் கூறி நவ்யாவின் குடும்பத்தினரை விஜய் நம்ப வைத்துள்ளார். போலி ஆவணங்களைக் காட்டி அவர்களின் சேமிப்பு மற்றும் நகைகளை முதலீடு செய்ய வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
பணத்தைத் திரும்பக் கேட்கச் சென்றபோது, விஜய் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவர் தனது தங்கை என்று அறிமுகப்படுத்தியவர் உண்மையில் அவரது மனைவி என்பதும் தெரியவந்தது. இந்த மோசடியில் விஜய்யின் தந்தை மற்றும் மனைவிக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. புகாரைத் தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.