35 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்தில் மாற்றம்? புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிய வாக்குப்பதிவு!

டாக்கா: வங்கதேச அரசியலில் கடந்த 35 ஆண்டுகளாக நீடித்து வந்த சூழல் இன்று மாறுமா? சுமார் 18 மாத கால அரசியல் நெருக்கடிகளுக்குப் பிறகு, வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. முதன்மை ஆலோசகர் டாக்டர் யூனுஸின் இடைக்கால ஆட்சிக்குப் பிறகு, ஒரு புதிய விடியலை நோக்கி அந்நாட்டு மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மொத்தம் 299 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், அரசின் சீர்திருத்தங்கள் குறித்த வாக்கெடுப்பும் (Referendum) நடத்தப்படுகிறது. அவாமி லீக் கட்சி பங்கேற்காத இந்தத் தேர்தலில், பிஎன்பி (BNP) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனினும், சாதாரண குடிமக்கள் நாட்டின் நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பையே பிரதானமாக எதிர்பார்க்கின்றனர்.
சுமார் 9 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்களின் கண்காணிப்பில் நடைபெறும் இந்த ஜனநாயகத் திருவிழாவின் முடிவுகள், மக்களின் பேச்சுரிமை மற்றும் எதிர்கால வாழ்க்கைத்தரத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.