2025 இல் இந்தியர்களை அதிகளவில் வெளியேற்றியது சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சகத்தின் அதிர்ச்சித் தகவல்

2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட சவுதி அரேபியா அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சுமார் 11,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விசா விதிமீறல்கள், குடியிருப்பு அனுமதி (இகாமா) காலாவதி மற்றும் முறையான பணி அனுமதி இல்லாத காரணங்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் கட்டுமானப் பணி மற்றும் வீட்டு வேலைகளில் அதிக எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளூர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
சவுதி அரேபியா மட்டுமின்றி ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்தியர்களை வெளியேற்றியுள்ளன. குறிப்பாக ரஷ்யாவில் சுமார் 82 மாணவர்கள் வெளியேற்றப்பட்டாலும், சவுதியுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. மியான்மர் மற்றும் கம்போடியாவில் சைபர் மோசடிகளில் சிக்கி இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. விசா சட்டங்களை மீறுதல் மற்றும் ஏஜெண்டுகளின் ஏமாற்று வேலைகளால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் 2025 ஆம் ஆண்டில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.